ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி எழுதிய “உயிர்வாசம்” என்ற புதிய நாவல் நாளைய தினம் கிளநொச்சியில் வெளியிடப்படவுள்ளது. கிளிநொச்சியின் பரந்தன் குமரபுரத்தில் நாளை புதிதாக திறக்கப்படவுள்ள சுப்பிரமணியம் இராசம்மா தம்பதியினர் மணிமண்டத்தில் காலை 11 மணியளவில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஈழத்தின் கிளிநொச்சியை சேர்ந்த புகழ்பூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி, பச்சைவயல் கனவு, மற்றும் வன்னியாச்சி சிறுகதை தொகுப்பின் ஊடாக பரவலாக அறியப்பட்டவர். ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவராக கருதப்படும் இவர், 1973 முதல் சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதிவருகின்றார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.
சுமைகள், தாகம், வீதியெல்லாம் தோரணங்கள், பச்சை வயல் கனவு முதலிய நாவல்களையும் மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி முதலிய சிறுகதை தொகுப்புக்களையும் எழுதியுள்ள தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவலானது, ஈழத்திலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் மனிதர்களின் வாழ்வுப் பின்னணியை வைத்து எழுதப்பட்டது.
நிகழ்வில், கவிஞர் கருணாகரன், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் விமர்சகருமான தி. செல்வமனோகரன் மற்றும் யேசுவா அடிகளார் ஆகியோர் உரைகளினை நிகழ்த்தவுள்ளனர். இதேவேளை தற்போது புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் தாமரைச்செல்வி, இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நாவல் வெளியீட்டுக்கான ஏற்புரையை நிகழ்த்தவுள்ளார்.
-கிளிநொச்சியிலிருந்து வணக்கம் லண்டன் செய்தியாளர்