சிரிய ஜனாதிபதி பஷார் அல் – அஸாத், நாட்டின் தலைநகர் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ச்சியுறலாம் என அஞ்சியே இரசாயனத் தாக்குதலை நடத்தி நூற்றுக்கணக்கானோரை கொன்றுள்ளதாக ஜேர்மனிய புதிய புலனாய்வு தகவலொன்று வெளியானதாக செய்திகள் கசிந்துள்ளன.
ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் சிரேஷ்ட கட்டளைத் தளபதியொருவர், லெபனானிலுள்ள ஈரானிய தூதரகத்துக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்பை பதிவு செய்தே ஜேர்மனிய புலனாய்வுத் தலைவர்களால் இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது.
சிரிய ஜனாதிபதி, தலைநகரின் கட்டுப்பாட்டை வெற்றி கொள்வது தொடர்பான போராட்டத்தில் அரசாங்கப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையேயான பலத்தில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளதாக அந்த ஹிஸ்புல்லாஹ் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி கிளர்ச்சியாளர்களை பலவீனமடையச் செய்து பின்வாங்கச் செய்யும் முகமாகவே சிரிய அரசாங்கம் சாறின் இரசாயனத்தை பிரயோகிக்க திட்டமிட்டிருக்கலாம் எனவும் ஆனால் படையினர் தவறுதலாக அந்த இரசாயனத்தை அதிகளவில் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் நம்புவதாக ஜேர்மனிய புலனாய்வு அமைப்பான ‘பி.என்.டி’ தெரிவித்தது.
”எம்மால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகள் மூலம் இரசாயன தாக்குதல் தொடர்பில் சிரிய அரசாங்கமே குற்றவாளியாகவுள்ளது. சாறின் போன்ற இரசாயனங்களை கொண்டிருப்பது அந்த அரசாங்கம் மட்டுமேயாகும்” என ‘பி.என்.டி’ புலனாய்வு நிலையத்தின் தலைவர் ஜெர்ஹார்ட் சசின்ட்லர் தெரிவித்தார்.
தமக்கு கிடைத்துள்ள புதிய தகவலானது எதிர்வரும் நாட்களில் சிரியாவுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் தீர்மானமெடுப்பதற்கு முக்கியமானதாக அமையும் என அவர் மேலும் கூறினார்.
எனினும் ஜேர்மனியானது சிரியாவுக்கு எதிராக முன்னெடுக்க சாத்தியமான இராணுவ நடவடிக்கையில் பங்கேற்கமாட்டாது எனவும் கூறப்படுகிறது.