நாம் ஒருமித்த நாட்டிற்குள், பெரும்பான்மை இனத்தவர்களுக்குள் அடிமையாகிப் போகாமல் எமது நாட்டில், எமது பிரதேசத்தில் கௌரவத்துடனும் சுய மரியாதையுடன் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு போதியளவு அதிகாரங்களும் சுயாட்சியும் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றே கோரி நிற்கின்றோம்.
இதனையே தேர்தல்விஞ்ஞாபனத்திலும் தெரிவித்துள்ளோம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஜனாதிபதியும் தென்னிலங்கையின் பேரினவாத சக்திகளும் நன்கு விளங்கிப் படிக்க வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தை தென்பகுதி மக்கள் மத்தியில் தவறாக விமர்சிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.அலுவலகத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஒன்றுபட்ட நாட்டிற்குள் உண்மையான, உறுதியான, விசுவாசமான, போதுமான அளவுக்கு அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமாக இனப்பிரச்சினை தீர்வுகாணப்பட வேண்டும் என்ற கருத்தையே நாங்கள் வெளிக்கொணர்ந்துள்ளோம்.
எமது தற்போதைய நிலைப்பாடு தொடர்பாகவும் எமது அரசியல் நோக்கம் என்ன என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளோம். எதிர்வரும் காலத்தில் இதை அடைவதற்கு என்னவிதமாக செயற்படவுள்ளோம், எவ்விதமாக அடையலாம் என்றும் கூறியுள்ளோம். இதனையும் ஒருமித்த நாட்டிற்குள் ஒற்றுமையாக ஒருதீர்வு காணப்பட வேண்டும் என்றே தெளிவுபடுத்தியுள்ளோம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் கேட்டதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்பதாக ஜனாதிபதியும் தென்னிலங்கையில் உள்ள சில தீவிர சக்தியினரும் தவறாக கூறிவருகின்றனர்.
இதனைக் கூறுபவர்கள் எமது விஞ்ஞாபனத்தை தெளிவாக வாசிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் எதைக் கேட்டார்கள் என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக் கேட்கின்றோம் எனவும் இவர்கள் சொல்லவில்லை. ஆனால் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இவர்களுடைய கருத்து அமைந்துள்ளது.
சர்வதேச பங்களிப்புடனே தீர்வு என்பதை கூறியுள்ளோம். இவ்விதமான தீர்வு ஒருமித்த நாட்டிற்குள் என்பதையும் தெளிவாக கூறியுள்ளோம். ஆகவே இவ்விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் விசேடமாக பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாமல் இருக்க வேண்டும் எனவும் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.