வட மாகாண சபையில் வெற்றிபெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பிலும் தமது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்து மட்டக்குளியையும் வெள்ளவத்தையையும் நந்திக்கடலாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றது. அதற்கு தமிழ் மக்கள் இடமளிக்கக்கூடாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
1977 ஆம் ஆண்டில் தமிழ்த் தரப்பு பயணித்த பாதையிலேயே தற்போது தமிழ்க் கூட்டமைப்பு பயணிக்கின்றது. எனவே அன்று அமிர்தலிங்கத்துக்கு ஏற்பட்ட நிலைமையே விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் மீண்டும் இனவாதத்தை உருவாக்கி தற்போதைய நிலைமை உருவாகுவதற்கு இந்தியாவும் தமிழகமுமே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். இந்தியா அன்று இலங்கை விடயத்தில் தலையிட்டு அதன் பிரதமரையும் 1200 இராணுவ வீரர்களையும் இழந்தது. அதே பாதையிலேயே இந்தியா தற்போதும் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட் டார்.
வடக்குத் தேர்தல் முடிவுகள் நாட்டில் எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இதற்கு இடமளித்த அரசாங்கமும் பொறுப்புக்கூறவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தவாறு ஆடுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்