தமிழ் மாமன்றத்தினது மூன்றாவது விவாதப் பயிலரங்கு வ/செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இவ் விவாதப் பயிலரங்கு தொடர்பாக தமிழ் மாமன்றம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்;
எம்மால் நடாத்தப்பட்ட இந்த விவாதப் பயிலரங்கில் வ/செட்டிகுளம் ம.வி, வ/வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயம், வ/ஆண்டியாபுளியங்குளம் மு.ம.வி போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் பங்கு கொண்டனர். ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்களின் திறமையை நாம் கண்டு மிகவும் வியந்தோம். கடந்த இரண்டு பயிலரங்குகளினை விட, இந்த மூன்றாவது பயிலரங்கு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாணவர்களிற்கான தனி பேச்சு, சுழலும் சொற்போர், ஒரு தலைப்பினை எடுத்து விவாதித்தல் மற்றும் விவாதம் என்பவற்றில் அம்மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர். மேலும் மாணவர்களின் குறை, நிறைகள், மற்றும் விவாதத்தில் கவனிக்க வேண்டியவை போன்ற விடயங்கள் எம்மால் அவர்களுக்கு பயிற்றுவிக்கக் கூடியதாக இருந்தது.
மாணவர்கள் தமது கருத்துக்களை மிகவும் வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும் கூறியிருந்தார்கள். பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் தங்களுக்கான களங்கள் இல்லையென்றும், வாய்ப்புக்கள் அமையவில்லை என்றும் கூறியிருந்தனர். நிச்சயமாக எங்களால் அவர்களுக்கான களங்கள் உருவாக்கித்தர முடியும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தினோம். திறமைகள் எங்கிருப்பினும், அதனை இனம் கண்டு தமிழ் மாமன்றம் அதற்கான களங்களை அமைத்துத் தரும் என்று எம்மால் நிச்சயம் கூற முடியும். தமிழ் மாமன்றத்தின் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என அந்த ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.