அமெரிக்க குடியரசு கட்சியின் ஒரு பழைமைவாத பிரிவொன்று நாடு கடனில் மூழ்குவதை அனுமதிப்பதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.
அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளும் வரவு, செலவுத் திட்டமொன்று தொடர்பில் இணக்கம் காணத்தவறியதையடுத்து அந்நாட்டு அரசாங்க நிறுவனங்கள் பகுதியாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பராக் ஒபாமா பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் தோல்வியில் முடிவடைந்தது.
அமெரிக்க நிறுவனங்கள் மூடப்பட்டமை குறித்து ஜனநாயக கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேற்படி நிறுவனங்கள் மூடப்பட்டதால் 700,000 ஊழியர்கள் ஊதியமில்லாத விடுமுறையை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன் தேசிய பூங்காக்கள், சுற்றுலா ஸ்தலங்கள், அரசாங்க இணையத்தளங்கள் அலுவலக கட்டடங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடன்களின் வரையறைகள் உயர்த்தப்படா விட்டால் இந்த மாதம் 17 ஆம் திகதி அமெரிக்க அரசாங்கம் கட்டணங்களைச் செலுத்துவதற்கு பணமின்றிய நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
இந்நிலையில், பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையை கட்டுப்படுத்தி வரும் குடியரசுக்கட்சியினர், அரசாங்கம் தனது செயற்பாடுகளை தொடர நிதியளிப்பதற்கும் கடன் வரையறையை அதிகரிப்பதற்கும் பதிலீடாக பராக் ஒபாமாவிடமிருந்தும் அவரது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களிடமிருந்தும் சலுகைகளை கோரியுள்ளனர்.
அவர்கள் கடந்த ஆண்டு தேர்தலில் முக்கிய விவகாரமாக அமைந்த சுகாதார கவனிப்பு சீர்திருத்த சட்டத்தை தாமதப்படுத்த வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் பராக் ஒபாமா புதன்கிழமை வோல் வீதியிலுள்ள ஜேபி மோர்கன் சேஸ், கோல்ட்மான் சக்ஸ், அமெரிக்க வங்கி ஆகியன உள்ளடங்கலான முக்கிய வங்கிகளின் தலைவர்களைச் சந்தித்து கடன் வரையறை மற்றும் ஏனைய பொருளாதார பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்க நிதி சேவைகள் மன்றத்தின் உறுப்பினர்களான வங்கியாளர்கள், கடன் வரையறைகளை உயர்த்த வலியுறுத்தி பாராளுமன்றத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.