ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள ‘நேட்டோ’ படையில் இங்கிலாந்து ராணுவமும் இடம் பெற்றுள்ளது. எனவே இங்கிலாந்து விமான படையில் பணிபரியும் இளவரசர் ஹாரி ஆப்கானிஸ்தான் சென்று இருந்தார்.
அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரின் விமானியாக பணிபுரிந்தார். அங்கு முகாமிட்டிருந்த முஜாகிதீன் மற்றும் தலிபான் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்தார்.
தற்போது அங்கு பணிமுடித்த அவர் இங்கிலாந்து திரும்பி விட்டார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் குன்னார் மாகாணத்தின் தலிபான் தீவிரவாதிகளின் கமாண்டர் குவாரி நஸ்ருல்லா இங்கிலாந்தின் டெய்லி மிர்ரர் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
அதில் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தபோது இளவரசர் ஹாரிதான் எங்களுக்கு முதல் இலக்காக இருந்தார். அவரை பிடிக்க குறி வைத்திருந்தோம். அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டோம்.
இங்கிலாந்தில் வேண்டுமானால் அவர் இளவரசர் ஆக இருக்கலாம். எங்களை பொறுத்தவரை அவர் ஒரு சாதாரண ராணுவ வீரர்தான் என தெரிவித்துள்ளார்.