முகப் புத்தக சமூக வலைத்தளத்தை தடை செய்வதற்கோ அல்லது அதனை மட்டுப்படுத்துவதற்கோ இதுவரையில் எந்தவிதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தது.
பேஸ்புக் வலைத்தளத்தை தடை செய்வதற்கு அல்லது அதனை மட்டுப்படுத்துவதற்கு அரசினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என திர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகில் இன்று 1.2 பில்லியனுக்கு மேற்பட்ட பாவனையாளர்கள் பேஸ்புக் வலைத்தளத்தை பாவித்து வருகிறார்கள். சுமார் 5300 க்கும் மேற்பட்ட ஊழியர்களைகொண்டு இயங்கிவரும் பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டில் 53 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த 2004 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் வலைத்தளம் இன்று அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய சமுக வலைத்தளத்தைப் பற்றியே இலங்கைப் பாராளுமன்றத்தில் மேற்படி விளக்கம் கோரப்பட்டுள்ளது.