பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்டு தெரிவிக்கும் விடயங்களுக்கு இலங்கையின் சார்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.
எவ்வாறெனினும் இலங்கை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் கேள்விகளை எழுப்பவுள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளனவே தவிர உத்தியோகபூர்வமாகஎந்த அறிவிப்பும் எமக்கு விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு இலங்கையிடம் பல கேள்விகளை எழுப்பவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருந்தமை தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பவுள்ளதாக ஊடகங்களிலேயே செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. மாறாக அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் எம்மை வந்து சேரவில்லை.
எனவே ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் என்ற வகை யில் என்னால் கருத்து வெளியிட முடியாது.
எவ்வாறெனினும் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் எந்தவொரு நாட்டினதும் தலைவருக்கு எந்தவொரு விடயத்தையும் கூறுவதற்கான ஜனநாயக உரிமை இருக்கின்றது.
ஆனால் வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கை தொடர்பில் கேள்விகளையோ அல்லது ஏதாவது விடயங்களையோ எழுப்பினால் அவற்றுக்கு உரிய விளக்கங்களை அளிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பிலான அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர். அந்தவகையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஏதாவது விடயங்களை எழுப்பினால் அவற்றுக்கு உரிய விளக்கங்களை அளிப்பதற்கு எமது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.