வியட்நாம் விமானம் ஒன்று டணங் விமான நிலையத்தை அடைந்தப்போது, அதனை கவனித்த விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானத்தில் ஒரு சக்கரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வியட்நாமின் வடக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரமான ஹாய் போங்கிலிருந்து மத்திய பகுதியில் உள்ள டணங் நகரத்திற்குப் பறந்துகொண்டிருந்த ஏடிஆர்-72 விமானத்தின் முன் சக்கரம் ஒன்று நடுவானில் கழன்று விழுந்துள்ளது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானத்தில் பயணித்த தொழில்நுட்ப உதவியாளரிடம் கேட்டபோது, அவர் தனக்கு விமானம் தரையிறக்கப்படும்போது எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றும் தனது கவலையெல்லாம் விமானத்தில் இருந்து விழுந்த சக்கரம் யார் மீதாவது விழுந்திருக்குமா என்பது தான் என்றும் கூறியுள்ளார்.
நடுவானில் சக்கரம் கீழே விழுந்தது விமானத்தில் இருந்த குழுவினர் மற்றும் 41 பயணிகள் என யாருக்குமே தெரியாத நிலையில், அந்த விமானம் எப்பொழுதும்போல தரையிறக்கப்பட்டுள்ளது. பின்னர், இந்த விமானம் பழுதுகளை சரிப்படுத்த அனுப்பிவைக்கப்பட்டது.
கடந்த வாரம் இதே மாடல் வகையான ஏடிஆர்-72 வகை பயணிகள் விமானம் ஒன்று கடுமையான புயலில் சிக்கி தெற்கு லாவோசில் விழுந்ததில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த 11 நாடுகளை சேர்ந்த 49 பயணிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.