இலங்கைக்கான தனது விஜயம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று திங்கட்கிழமை பிரித்தானிய பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
இந்தத் தகவலை பிரித்தானியாவின் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹகோ ஸ்வேயார் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஆகியோர் நேற்று இராஜாங்க அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பின்போதே ஸ்வேயார் இதனை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அரசியல் தீர்வொன்றை காண்பதற்கான வழிவகைகள் தொடர்பிலும், இச்சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளன.
மனித உரிமை விவகாரம், யுத்தக்குற்றச்சாட்டுக்கள், ஊடக சுதந்திரம், என்பவை தொடர்பில் பிரித்தானியா தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்தும். நல்லிணக்கம் ஏற்பட்டு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாகும். அதற்காக தொடர்ந்தும் பிரித்தானியா பாடுபடும் என்று இராஜாங்க அமைச்சர் ஸ்வேயார் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் 12.30 மணிமுதல் 1.30 மணிவரை இந்தச் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் நேற்று அதிகாலை நாடுதிரும்பியுள்ளார். இன்றைய தினம் அவர் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.