தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் மாறாக அந்த தலைமைத்துவத்தை தனக்குத் தருமாறு கேட்பது அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாரம் ஒரு கேள்விக்கு பதிலளித்து அவர் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச மத்தியஸ்தத்துடனேயே இனப் பிரச்சினைக்கான பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களுக்கு வரவிருக்கும் கெடுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை மக்கள் பிரச்சினைகளை மறந்தது போல் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கஞ்சிப் பானைக்கு காலப்போக்கில் விற்று விடுவார்கள் எனவும் அவர் சாடியுள்ளார்.
சேர்.பொன்னம்பலம் இராமநாதன் தொடக்கம் இன்று வரையான சகல தமிழர் தலைவர்களும் சட்டத்தரணிகளாகவே இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஆகவே அவர்கள் மக்களை ஒன்று சேர்த்து ஒரு குடைக்கீழ் கொண்டு வருவார்கள் என்பது சந்தேகம் எனவும் கூறியுள்ளார்.
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று உருமாற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போல் தமிழ் தலைமைகள் செயற்படுவது வேதனைக்குரியது எனவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை தம் கைகளுள் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழ் தலைமைகளின் பலவீனத்தை புரிந்து கொண்டு மத்திய அரசாங்கம் அவர்களை தம்வசப்படுத்தி வருவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முன்வருமாறு ரெலோவின் தலைவர் செல்வம் அடைகலநாதன் அண்மையில் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அவரின் அழைப்புக்கு பதில் அளிக்கும் வகையிலேயே தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.