செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ராஜபக்ஷக்களைச் சிறையில் அடைப்பதால் தீர்வு கிடைக்காது! நாமல் தெரிவிப்பு

ராஜபக்ஷக்களைச் சிறையில் அடைப்பதால் தீர்வு கிடைக்காது! நாமல் தெரிவிப்பு

1 minutes read

“எம்மைச் சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடையாது. எம் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கின்றோம். ராஜபக்ஷக்களையும், கடந்த அரசுகளையும் விமர்சித்துக் கொண்டிருக்காமல் சமூகக் கட்டமைப்பில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுங்கள்.”

– இவ்வாறு அநுர அரசிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

“அரசு ஆட்சிக்கு வந்து 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கு அரசு இதுவரையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உப்பு பிரச்சினைக்கு தீர்வு காணாதவர்கள் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியதே,

நாட்டு மக்கள் மரமுந்திரிகை சாப்பிடுவதைப் போன்று உப்பு சாப்பிடுவதில்லை என்று அரசு பொறுப்பற்ற வகையில் பதிலளிக்கின்றது. உணவின் அடிப்படைப் பொருளாகவே உப்பு காணப்படுகின்றது. ஆகவே, உப்பு உற்பத்தியில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காணுங்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் “நானும் இராணுவ வீரன்” என்று குறிப்பிட்டுக் கொண்டு திரிந்தவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளார்கள்.

இராணுவத்தில் சேவையாற்றிய பலர் இன்று ஆளும் தரப்பில் உள்ளார்கள். பலர் பதில் அமைச்சர்களாகவும் உள்ளார்கள். இராணுவ வீரர்களை வீரர்கள் என்று குறிப்பிடும் தற்றுணிபு இவர்களுக்குக் கிடையாது. தேர்தலுக்கு முன்னர் இராணுவ வீரர்களைச் சிப்பாய் என்று குறிப்பிடவில்லை.

அரசின் பலவீனம் மற்றும் குறைபாடுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும்போது அதனை அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் இலக்கு வைக்கப்படுகின்றார்கள். எம்மைச் சிறைக்கு அனுப்பி அடிப்படை மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. எம் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்த்துக்கொள்கின்றோம்.

சமூகக் கட்டமைப்பில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ராஜபக்ஷக்கள் காரணம், கடந்த அரசு காரணம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் குற்றஞ்சாட்டினீர்கள். இனியும் இந்தக் குற்றச்சாட்டு செல்வாக்கு செலுத்தாது. ஏனெனில் 6 மாதங்கள் கடந்து விட்டன. ஆகவே, போலியாக விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துக் கொண்டிருக்காமல் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுங்கள்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More