இம்ரான் கானும் அவரது அரசாங்கமும் கவிழ்க்கப்பட்டு ஒரு வாரமான நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் பதவியின் எதிர்காலத்தில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் சமகாலத் தலைவர் ரமிஸ் ராஜா, கடந்த வருடம் இம்ரான் கானினால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரமிஸ் ராஜா 255 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்தார். அவற்றில் அரைவாசிக்கும் மேற்பட்ட போட்டிகள் இம்ரான் கானின் தலைமையில் விளையாடப்பட்டவையாகும்.
பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் நீக்கப்படடதைத் தொடர்ந்து ரமிஸ் ராஜாவின் எதிர்காலம் சந்தேகத்திற்குரியதாகி விட்டதாக கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் அரசாங்கம் மாறியபோதெல்லாம் அந் நாட்டு கிரிக்கெட் சபையிலும் மாற்றங்கள் இடம்பெற்றுவந்துள்ளன.
புதிய பிரதமராக தெரிவாகியுள்ள ஷாபாஸ் ஷெரிப், இயல்பாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் போஷகர் பதவிக்கு உரித்தாகிறார்.
இந் நிலையில் ரமிஸ் ராஜாவுக்கு பதிலாக வேறொருவரை நியமிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஷாபாஸ் ஷெரிப் ஆராய்வதாக கருதப்படுகிறது.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது நடத்தப்பட்ட வாக்களிப்பில் இம்ரான் கான் தோல்வி அடைந்ததை அடுத்து ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.