தமக்கென வீடுகளை அமைத்த சுமேரியர் அதன்பின் பாரிய கோயில்களை அமைத்தனர். கோயில்கள் சீகுராட் என அழைக்கப்பட்டன. அவை மிகப்பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருந்தன. மழையோ புயலோ வெள்ளமோ வந்தால் கோயிலுக்கு எவ்வித சேதமும் ஏற்படாதவகையில் உயரமாகவும் கட்டப்பட்டது. தானியங்கள் எல்லாம் கோயில்களிலே பாதுகாக்கப்பட்டது. நாளடைவில் தானியங்கள் கொடுக்கல் வாங்கல்கள் கூட கோயில்களிலேயே இடம்பெற்றன. கோயில்களே அவர்களின் பொதுத் தளமாக இருந்தது. கற்றவர்கள் கூடி முடிவுகளை எடுக்கும் இடமாகவும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு அனைத்தையும் தீர்மானிக்கும் இடமாகவும் கோயில்களே விளங்கின. காலம் செல்லச்செல்ல சுமேரியர் சிறுசிறு நகரங்களை உருவாக்கி நகரங்களின் மத்தியில் கோயில்களை அமைத்தனர்.
தற்பொழுதுள்ள எமது கோயில் கோபுரக் கலசங்களிலும் பல்வகைத் தானியங்கள் வைக்கப்படுவதைக் காணலாம். தானியங்கள் இடியைத் தாங்கும் வல்லமை கொண்டமையாக விளங்குகின்றன. அதனாலேயே கோயில் கோபுரங்கள் மிக உயரமாகக் கட்டப்பட்டு தானியங்கள் அங்கு பாதுகாக்கப் பட்டன. குறிப்பிட்ட சுற்று வட்டாரத்தில் வாழும் மக்களுக்கு இடிதாங்கியாகவும் கோயிற் கோபுரங்கள் விளங்கியிருக்கின்றன. அத்துடன் வெள்ளமோ புயலோ ஏற்பட்டு அழிவுகள் ஏற்பட்டாலும் கோபுரக் கலசத்தில் பாதுகாக்கப்பட்ட தானியங்களில் இருந்து மீண்டும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முடியும். அதனாலேயே தமிழர் உயரமான கோபுரங்களை வடிவமைத்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இது கூட தமிழரின் உயரிய நுண்ணறிவுக்கு ஒரு சான்றாகும்.
கோயில்கள் மட்டுமே பிரமாண்டமாக இருந்ததே அன்றி நகருக்குப் பொறுப்பாக இருந்தவர்களோ குருமாரோ யாருமே பிரமாண்டமாக எதையும் கட்டவில்லை. மக்களிடையே வேறுபாடுகள் அதிகம் காணப்படவில்லை.
அங்கு அவர்கள் மன்னர்காலங்களில் இருந்ததுபோல் ஆடம்பரமான வீடுகளையோ, மாளிகைகளையோ, அரண்மனைகளையோ அமைக்கவில்லை. அனால் கோயிலுக்கு அடுத்தபடியாக குருமார்களும் அந்த இனத்தை நிர்வகிப்போரும் பெரிய வீடுகளிலும், வியாபாரிகள் நடுத்தர வீடுகளிலும், மற்றைய தொழிலாளர்கள் சிறிய வீடுகளிலும் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. ஒரு நகரத்தில் கோயிலைச் சுற்றியே வீடுகள் அமைக்கப்பட்டன. கோயில்களில் அறிவிற்சிறந்தோர் கூடிச் சங்கமும் அமைத்தனர்.
சுமேரியரின் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் கணக்கு வழக்குகளை சரியாகப் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டதனால் களிமண்ணால் செய்யப்பட்ட தட்டுகளில் தடியினால் கோடுகள் போட்டு கணக்கை ஆவணப்படுத்தத் தொடங்கினர். அவ் எழுத்து வடிவம் கூனிபோம் (Cuniform) என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் சுமேரிய இனம் கணிதத்தில் பாரிய வளர்ச்சி கண்டது. அதைத் தம் இனத்தவர்க்குக் கற்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதனால் அவர்கள் பாடசாலைகளை அமைத்தனர்.
குருவினால் கணிதம் போதிக்கப்பட்டது. பலவந்தமாகவும் கணிதம் போதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒருவர் தனது எட்டு வயது தொடக்கி இருபது வயதுவரை கட்டாயம் கற்க வேண்டும். ஆனால் எல்லோரும் கற்கவில்லை. கோயில்களினால் தெரிவு செய்யப்பட்டவர் மட்டுமே கற்றனர். பாடசாலைகள் கோயில்களிலேயே இயங்கின.
தொடரும் …
நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து
இத்தொடரின் முன்னைய பகுதிகள்…
http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/
http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/
http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-2-2/
http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-3/
http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-4/
http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-5/
(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திரு சிவகனேஷன் அவர்களுடைய வழிகாட்டலுடன் திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? யார் இந்த சுமேரியர்? இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானது? இவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்? இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்…)