இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள ஆட்கடத்தல் குற்றங்களைத் தடுப்பதற்கான செயற்திட்டத்திற்கென ஒரு மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், ‘அனைத்து முறைகளிலுமான ஆட்கடத்தல் நடவடிக்கைகளை முடிவிற்குக்கொண்டுவருவதில் அமெரிக்கா உறுதியாக இருக்கின்றது’ என்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு தாம் வழங்கியுள்ள நிதியுதவியானது ஆட்கடத்தல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும், இச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குடியகல்வு தொடர்பான சர்வதேச அமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இணைந்து ஆட்கடத்தல் குற்றங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கவுள்ள செயற்திட்டத்திற்கே அமெரிக்கா இந்த நிதியுதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.