வேலைக்காக பெருந்தொகையை கொடுத்து மலேசியாவுக்கு சென்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்த சம்பவங்கள் அண்மையில் நிகழ்ந்திருக்கின்றன.
இதனையடுத்து, மலேசியாவில் வேலைக்கு எடுக்கப்படும் வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை கண்டறியப்பட்டால், ஆட்சேர்ப்பு முகமைகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என்ற எச்சரிக்கையை மலேசிய தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
மலேசியாவுக்கு சென்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி நிர்க்கதியாகினர். குறிப்பாக வங்கதேச, நேபாளத்தின் தொழிலாளர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மலேசிய அரசு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
மலேசிய நிறுவனங்கள் பல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
தவிர, மலேசியாவில் உள்ள நிறுவனங்கள் கட்டாய உழைப்பில் தொழிலாளர்களை ஈடுபடுத்தியதற்காக அமெரிக்கா ஏற்கெனவே தடை விதித்திருக்கிறது.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் சிக்கல் தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மலேசிய தொழிலாளர் துறை, அரசின் ஒதுக்கீடுகளையும் உரிமங்களையும் தவறாக பயன்படுத்தும் ஆட்சேர்ப்பு முகமைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.