காஸா மோதல் நிறுத்தத்திற்கு இது சரியான நேரம் இல்லை என்றும் காஸாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா அதன் துருப்புகளை அனுப்பப்போவதில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இருப்பினும், மனிதாபிமான உதவியை அனுமதிக்கவும் போரில் சிக்கிய பொதுமக்கள் தப்பிச்செல்லவும் அவ்வப்போது மோதலை நிறுத்துவது அவசியம் என்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
போர் முடிந்ததும் காஸாவின் எதிர்கால ஆட்சியில் ஹமாஸ் குழு ஈடுபட முடியும் என்பதில் அமெரிக்காவுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் கூறினார்.
பாலஸ்தீன வட்டாரத்துக்கு வெளியே காஸா குடியிருப்பாளர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கும் அமெரிக்கா ஆதரவளிக்காது என்றும் அவர் கூறினார்.
போருக்குப் பின்னர் காஸாவின் எதிர்காலம் குறித்து பைடன் நிர்வாகம் பல்வேறு தரப்புடன் கலந்துபேசிவருவதாகவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும், ஹமாஸ் குழுவினர் இன்றி காஸா வட்டாரத்தில் எத்தகைய ஆட்சி அமையவேண்டும் என்பதை அவர்கள் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் ஜான் கிர்பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.