பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில், குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகே இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த இடம் வழமையாகவே, வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சட்டத்தரணிகள் எனப் பெருமளவிலான மக்கள் கூடும் பரபரப்பான பகுதியாகும்.
திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் குழப்பமான சூழல் நிலவியதுடன், அருகிலிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன.
வெடிப்பின் சத்தம் கேட்டவுடன் மக்கள் அங்கிருந்து சிதறி ஓடியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: “என்ன வகையான வெடிப்பு இது என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இதுவரை அது தெளிவாகத் தெரியவில்லை. எமது தடயவியல் குழுவிடம் இருந்து அறிக்கை கிடைத்த பின்னரே மேலதிக விவரங்களை வழங்க முடியும்.” என்றார்.
சம்பவம் நடந்த இடம் உடனடியாக சீல் வைக்கப்பட்டு, தடயவியல் மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெடிப்புக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
சட்டத்தரணி ஒருவரான ருஸ்தம் மாலிக் என்ற நேரில் கண்ட சாட்சி, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் சம்பவம் குறித்துத் தெரிவிக்கையில்: “நான் எனது காரை நிறுத்தி வளாகத்திற்குள் நுழைந்தபோது, வாயிலில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. அங்கு பெரும் குழப்பம் நிலவியது, சட்டத்தரணிகளும் பொதுமக்களும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். நான் இரு சடலங்களைப் பார்த்ததுடன், பல கார்கள் சேதமடைந்திருந்ததையும் கண்டேன்” என்றார்.