இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள நிலைமை காரணமாக எதிர்காலத்தில் பல தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலி காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவும் கடுமையான ஆபத்து உள்ளதாக அந்தச் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் நாட்டைப் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக, எதிர்காலத்தில் கடுமையான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என சுகாதாரத் துறையினர் என்ற வகையில் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
“அதன்படி, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலி காய்ச்சல் பரவும் கடுமையான ஆபத்து நிலவுகிறது. அத்துடன், தொற்று அல்லாத நோய்களிலும் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
“குறிப்பாக, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்குச் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளின் சிகிச்சை நிலைமைகள் தற்போது குழப்பமான நிலையை அடைந்துள்ளன.
“இந்த அனர்த்த நிலைமை காரணமாக அவர்களின் மருந்துகளை அவர்கள் தொலைத்திருக்கலாம். எனவே, அவர்கள் குறித்து நாங்கள் விசேட கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.