இந்தியாவின் சட்டிஸ்கர் (Chhattisgarh) மாநிலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், புகைபிடிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து கோபமடைந்த இளைஞன் ஒருவர் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார்சைக்கிளில் இரு இளைஞர்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக பெட்ரோல் நிலையத்துக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் புகைபிடிக்க முயன்றார்.
பெட்ரோல் நிரப்பும் இடத்தில் புகைபிடிக்கக் கூடாது என ஊழியர் எச்சரித்தபோதும், அதற்கு கோபமுற்ற அந்த இளைஞன் தன்னிடம் இருந்த லைட்டரை (lighter) நேரடியாக பெட்ரோல் டேங்கிற்குள் (petrol tank) எறிந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ வேகமாகப் பரவி, எரிந்த பெட்ரோல் அங்கு இருந்தவர்கள்மீது தெறித்தது. சம்பவ நேரத்தில் பெட்ரோல் நிலையத்தில் இரண்டு ஊழியர்கள் உட்பட சுமார் 10 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபத்தான சூழ்நிலையில், ஊழியர் ஒருவர் விரைவாகச் செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினார்.
பின்னர் தப்பிச் செல்ல முயன்ற இரு இளைஞர்களையும் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை இருவரையும் கைது செய்ததுடன், அவர்களது மோட்டார்சைக்கிளும் லைட்டரும் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.