இங்கிலாந்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய மாற்றத்துக்கான தேவையுள்ளது என லேபர் கட்சியின் பேட்ரிக் ஹர்லி (Patrick Hurley) தெரிவித்துள்ளார்.
சவுத்போர்ட் (Southport) தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் லேபர் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், கட்சியின் தலைமைத்துவ மாற்றம் தொடர்பான விவாதங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய பிரதமரும் லேபர் கட்சித் தலைவருமான கீர் ஸ்டார்மர் குறித்து கருத்து வெளியிட்ட அவர், லேபர் கட்சியின் அரசியல் வரலாற்றில் கீர் ஸ்டார்மர் முக்கிய தலைவர்களில் ஒருவராக நினைவுகூரப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார்.
எனினும், அனைத்து அரசியல் காலங்களுக்கும் ஒரு இயல்பான மாற்றச் சூழல் இருக்கும் என்றும், தற்போதைய சூழ்நிலையில் புதிய அணுகுமுறை மற்றும் புதிய மாற்றம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளாக இங்கிலாந்து எதிர்கொண்டு வரும் பல முக்கிய பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஆய்வுக் குழுக்கள் மற்றும் விசேட பணிக்குழுக்கள் அமைப்பதையே தீர்வாக முன்வைத்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அதேவேளை, உடனடியாக தலைமைத்துவத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இல்லை என்றும், நாடாளுமன்ற லேபர் கட்சியினரின் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் தற்போது தெளிவாக வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், எதிர்கால அரசியல் மாற்றத்திற்கான செயல்முறைகள் மற்றும் திட்டங்களை பிரதமர் கீர் ஸ்டார்மர் தற்போதே வடிவமைக்க வேண்டும் என பேட்ரிக் ஹர்லி வலியுறுத்தியுள்ளார்.