யோகா போன்று தியான பயிற்சி மேற்கொள்ளும் அமைப்புக்கு ஹாங்காங்கில் தடை விதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1992- ம் ஆண்டு சீனாவில் ஃபாலன் காங் (Falun Gong )என்ற புதிய வழிபாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டது. புத்தம் மற்றும் டாவோயிசத்தை பின்பற்றும் இந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள், இந்தியாவின் யோகா போன்ற தியானப்பயிற்சி, மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இதன் மூலம் உடலையும் மனதையும் நல்ல முறையில் பராமரிக்க முடியுமென்பது இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கை. உலகில் 114 நாடுகளில் Falun Gong அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மும்பை, புனே , பெங்களுரு போன்ற நகரங்களில் இந்த அமைப்பு உள்ளது. ஆனால், கடந்த 1999- ம் ஆண்டு Falun Gong அமைப்புக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டது.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சீனாவின் வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். இதனால், பயந்து போன ஏராளமானோர் ஹாங்காங் நகரில் வந்து குடியேறியுள்ளனர். கடந்த 2009- ம் ஆண்டு இந்த அமைப்பின் முக்கியமானவராக கருதப்படும் யாங் ஜியோலன் (Yang Xiaolan ) குடும்பத்துடன் ஹாங்காங் நகரில் குடியேறினார். ஹாங்காங் நகரில் இவர்கள் Falun Gong பயிற்சி முறைகளை நிம்மதியாக மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, ஹாங்காங் நகரில் சீன அரசு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால், ஹாங்காங்கிலும் Falun Gong அமைப்புக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபாலன் காங் என்பது சீன அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட ஒரு வழிபாட்டு அமைப்பு. சீன மக்களுக்கு விரோதமாக செயல்படும் இது போன்ற அமைப்புகளை தடை செய்வதை அடக்குமுறை என்று கூறுவது முட்டாள்த்தனமானது ” என்று கூறியுள்ளது.
சீன அரசின் நடவடிக்கையால் இந்த அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் ஹாங்காங்கை விட்டு வெளியேறி விட்டனர். ஆனாலும், யாங் ஜியோலன் உள்ளிட்ட 300 பேர் தியான பயிற்சிகளை இப்போதும் மேற்கொண்டுதான் வருகின்றனர். Falun Gong அமைப்புக்கு சீன அரசு கொடுக்கும் நெருக்கடி குறித்து யாங் ஜியோலன் கூறுகையில், ” கடந்த 1997 – ம் ஆண்டில் ஹாங்காங் சீனாவிடத்தில் ஒப்படைக்கப்பட்ட போது, ‘ஒரு நாடு, இரண்டு நிர்வாகம் என்பதை சீன அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி, சீனாவில் இல்லாத உரிமைகளை ஹாங்காங் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய உரிமைகளை சீன அரசு தருவதில்லை ”என்று வேதனை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ,அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, Falun Gong அமைப்புக்கு சீன அரசு கொடுக்கும் நெருக்கடியை கை விட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.