கடந்த மாதம் 28ஆம் திகதி, கிரீஸில் 350 பயணிகளை ஏற்றிச்சென்ற ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாதில் மரணித்தோர் தொகை 57ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு மரண விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மரணித்தவர்களின் மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் விபத்தின் போது ஒரு ரயில் பெட்டி தீயில் வெடித்துச் சிதறியுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் கவனக்குறைவுதான் காரணம் எனக் கூறி மக்கள் ஆவேசமடைந்து, அங்கு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், ரயில்வே துறை ஊழியர்கள், நேற்று (02) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கிரீஸ் ரயில்வே துறையை மேம்படுத்த முன்னாள், இந்நாள் அரசாங்கங்களும் சம்பந்தப்பட்ட நிறுவனமும் தேவையான முயற்சிகளை எடுக்கவில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது.
இதேவேளை, கிரீஸில் 2000ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவே, ரயில்வே துறையில் போதிய முதலீடுகள் செய்யமுடியாமல் போனதாக கிரீஸ் அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி – விபத்தையடுத்து வெடித்த போராட்டங்கள்