ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வீட்டில் இருந்து உணவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி மறுத்துவிட்டதால், மற்ற கைதிகளுக்கு வழங்கும் உணவே அவருக்கும் வழங்கப்படுகிறது.
இந் நிலையில் வாரம் 1500 ரூபாய் அவரது குடும்பத்தினரால் சிதம்பரத்துக்கு வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதாவது, நீதிமன்றக் காவலிலோ அல்லது தண்டனை பெற்றோ இருக்கும் நபர் ஒருவருக்கு, அவரது அடிப்படை தேவைகளுக்காக வாரம் 1500 ரூபாயை, அவரது குடும்பத்தினர் வழங்கலாம் என்றும், அந்தப் பணம் டெபாசிட் செய்யப்பட்டு, அந்த கைதிக்கு நம்பர் இல்லாத ஏடிஎம் கார்டு கொடுக்கப்பட்டு, அதன்மூலம் அவர் பணத்தை எடுத்து தேவையானதை வாங்கலாம் என்றும் விதி இருக்கிறது என்று தகவல்.
அதன்படி, சிதம்பரம் வீட்டினர், வாரம் 1500 ரூபாயை டெபாசிட் செய்ததாகவும், அதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், முகச்சவரம் செய்வதற்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களை அவர் வாங்கி வருவதாகவும் சிறைத்துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பணம் சம்பந்தப்பட்ட வழக்கில் சிறையில் அடைபட்ட சிதம்பரம், சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் பணத்தை கண்ணால் பார்க்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.