பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் அழித்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய எரிபொருள் சில்லரை விற்பனை நிறுவனமும் மூன்றாவது பெரிய சுத்திகரிப்பு நிறுவனமுமான பி.பி.சி.எல் நிறுவனத்தில் மத்திய அரசிடம் உள்ள 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “ இன்று இந்த நாடு மோடி அரசால் உருவாக்கப்பட்ட பல்வேறு பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது. இதில் தேவையில்லாத இந்த தனியார்மயமாக்கலும் ஒன்று.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. ஆனால் மோடி அரசு வேலைவாய்ப்பை அழித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது.
இந்தத் தனியார் மயமாக்கலால் மோடிக்கு நெருக்கமாக இருக்கும் சில நண்பர்கள் மட்டுமே இதனால் பயன் அடைவார்கள். தனியார் மயமாக்கலை நிறுத்துங்கள். அரசு வேலைவாய்ப்பை பாதுகாப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.