Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ராசி இல்லாதவர் என்ற பேச்சுக்கு முடிவு!

ராசி இல்லாதவர் என்ற பேச்சுக்கு முடிவு!

2 minutes read

இனி வரும் தேர்தல்களில் ம.தி.மு.க. தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்றும் வைகோ ராசி இல்லாதவர் என்பதற்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது எனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க.வின் 28 ஆம் ஆண்டு நிறைவையிட்டு முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி நகரில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் துரை வைகோ கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் 10 ஆண்டுகளாக சூழ்ந்திருந்த இருண்ட காலம் முடிவுக்கு வந்துள்ளது. உதித்தது உதய சூரியன். 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியால் பல சிக்கல்கள், பிரச்னைகள் தமிழகத்தைச் சூழ்ந்திருந்தன. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 ஆவது அலை வந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் அஜாக்கிரதையால் 2ஆவது அலை மிகவும் அபாயகரமாக பரவுகிறது.

பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்பதை போல், தமிழக அரசு பொறுப்பைத் தி.மு.க. ஏற்க உள்ளது. இந்த நேரத்தில் மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்கள், கிராமங்களில் கொரோனா 2 ஆவது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. தினமும், மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்கவில்லை, வென்டிலேட்டர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் கதறி அழுகின்றனர்.

இந்தப் பிரச்னை கையை மீறிச் சென்றுக்கொண்டுள்ளது. இதனால்தான் ம.தி.மு.க. தலைவர் வைகோ, கொரோனா 2 ஆவது அலையை எப்படிச் சமாளிப்பது என 5 முக்கியமான அம்சங்களை எழுதி, தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார். இதில், முக்கியமானது 10 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலை அதிகமாக உள்ளது. அ.தி.மு.க. அரசு அந்தப் பணியிடங்களை நிரப்பவில்லை.

கொரோனா 2 ஆவது அலையைக் கட்டுப்படுத்துவதுதான் தனது முதல் பணி என ஸ்டாலினும் தெரிவித்துள்ளார். இது பெரிய சவால்தான். இந்தச் சவாலை ஸ்டாலின் சமாளிப்பார் என்ற நம்பிக்கை கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்களுக்கும் உள்ளது.

ம.தி.மு.க.வைப் பொறுத்தவரை குறுகிய காலகட்டத்தில் புதிய சின்னத்தைக் கொடுத்து அதனை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதில் சில சிரமங்கள் இருந்ததால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். அடுத்த தேர்தலில் எங்களுக்குரிய தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

சமூக வலைத்தளங்களில் வைகோவை ராசி இல்லாதவர் என்று குற்றஞ்சாட்டும் மூடநம்பிக்கை பரவலாக இருந்தது. அதற்கு இன்று முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. கேரளாவில் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும், தமிழகத்தில் ஸ்டாலினும் வெற்றி பெற்றுள்ளனர். வைகோ ராசி இல்லாதவர் கிடையாது. கடந்த காலங்களில் அவர் கூட்டணி வைத்த கட்சிகள் வென்றுள்ளதை மறக்கக்கூடாது. இப்போது அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More