யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இந்த ஜனாதிபதியே விரும்பியோ விரும்பாமலே மக்களிற்கு தீர்வினை வழங்க வேண்டும் என முன்னால் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த கால அரசாங்கத்தினால் இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது, அவர்கள் மீண்டும் இன்று ஆட்சிக்கு வந்துள்ளார்கள். எங்களுடைய குறுகிய ஆட்சி காலத்தில் ஜனநாயகத்தை தேடிக்கொடுத்துள்ளோம். இன்று அரசாங்கத்தில் உள்ள ஜனாதிபதிதான் கடந்த யுத்தம் இடம்பெற்றபோது பாதுகாப்பு செயலாளராக இருந்துள்ளார். இந்த ஜனாதிபதிதான் விரும்பியோ விரும்பாமலோ மக்களிற்கான தீர்வை வழங்க வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகள் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் அவர்களிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் சொல்லவேண்டிய பாரிய பொறுப்பு அவருக்கு உள்ளது.
ஆகையால் மக்களின் முழு ஆதரவினை வழங்குவதன் ஊடாக அங்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இங்கு அபிவிருத்திகள் கட்டாயம் இடம்பெற வேண்டும். இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்புக்கள் விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். அதைவிட எமக்கு தீர்வு என்பது மிகவும் முக்கியமானது.இது ஒரே நாடாக இருந்தாலும் எங்கள் பிரதேசங்களில் எங்களது மொழிகளில் பேச வேண்டும். கட்டாயமாக எங்களிற்கு பொலிஸ், காணி அதிகாரம் வேண்டும். எங்களது மாகாணத்தில் நாங்கள் சுயமாக, சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலை வேண்டும்.
இன்று அரசாங்கத்தில் இருக்கின்றவர்களை ஒதுக்க வேண்டும். இன்று உள்ள ஆயுத குழுக்கள்தான் அரசாங்கத்துடன் இருந்து போராட்டத்தை காட்டிக்கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் காட்டிக்கொடுத்தமையால்தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருக்கின்றார்கள். ஆகவே அவர்களை நாங்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இன்று பல கட்சிகள் போட்டி போடுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் இன்னுமொரு கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சிகளை உருவாக்கி தேர்தலில் களமிறங்கியிருக்கின்றார்கள். அவர்களின் சுயநலத்திற்காக அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றார்கள் எனவும் அவர் குறித்த மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.