பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பிலுள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் பெண்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பெறமுடியாத பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள கருத்தினை வன்மையாகக் கண்டிக்கும் வகையில் பதாதைகள் ஏந்தியபடி திரளான பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸவின் மனைவி ஜலனி பிரேமதாஸவின் மகப்பேற்றுச் சுதந்திரத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுவந்தன.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இந்தக் கருத்தைக் கண்டிக்கும் வகையில் பிரதமர் அலுவலகத்தின் முன்னால் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் அமைப்புக்கள் பல கலந்து கொண்டிருந்ததோடு அதன் இறுதியில் பிரதமர் அலுவலகத்தில் கடிமொன்றும் கையளிக்கப்பட்டது.
குழந்தைகள் இல்லாத பெண்கள் பற்றி பிரதமரின் முன்னுதாரணத்துவம் இதுவா? நாட்டிலுள்ள பெண்கள் குறித்து பிரதமரின் கருத்து சரியா போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, பெண்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்ட கருத்திற்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டார்.