மதுசாரம் மற்றும் புகைப்பொருள் பாவனையால் வருடாந்தம் 35000 பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்டமிடல் அதிகாரி A.C ரஹீம் தெரிவித்தார்.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் நேற்றயதினம் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் 2020 பொதுத்தேர்தல் -புகைப்பொருள், மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் துரித அபிவிருத்தியை நோக்கிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதுசாரம் மற்றும் புகைப்பொருள் பாவனையால் வருடாந்தம் 35000 பேர் மரணத்தைத் தழுவுகின்றனர்.
மேலும் ஹெரோயின் போன்ற ஏனைய போதைப்பொருள் வகைகளினால் பெருமளவிலானோர் உள நோய்களிற்கு ஆளாகுகின்றனர்.
இலங்கையில் நாளொன்றிற்கு 38 கோடி ரூபா சிகரட்டிற்காக செலவிடப்படுகின்றது. சாராயம், பியர் பாவனைகளிற்காக தினமும் ரூபா 59 கோடி எமது மக்களால் செலவிடப்படுகின்றமை; குறிப்பிடத்தக்கது.
புகைப்பொருள், மதுசாரப் பாவனையைக் குறைப்பதானது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான மூதலீடு என ஐக்கியநாட்டு சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் போன்றோரால் இணங்காணப்பட்டுள்ளது.
அந்த வகையில் புகைப்பொருள் மற்றும் மதுசாரத்தை விற்பதனூடு பணமீட்டுவதானது இலாபமானதொரு விடயமாகக் கருதுவது காலாவதியான நம்பிக்கையாகும்.
புகைப்பொருள் பாவனையைக் குறைப்பதற்கு ரூபா 1000.00 ஒதுக்குவதன் மூலம் ரூபா 87000.00 இலாபமாகக் கிடைக்கின்றது என ஆய்வுகளிலிருந்து நிரூபனமாகியுள்ளது.
இவ்வாறான நிலைமையில்,புகைப்பொருள், மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மக்களின் பிரதிநிதியாக இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் எவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என்பதை காண்பிப்பதே எமது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் பரிந்துரைகளிற்கு பொதுத்தேர்தல் 2020 வேட்பாளர்களின் ஆதரவைப் பெற்று எதிர்காலத்தில் எமது நாட்டில் போதைப்பொருள், மதுசாரம், புகைப்பொருள் தொடர்பான நிலையான கொள்கைத்திட்டங்களை வகுத்துக்கொள்வதே இச்செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும்.
தனி சிகரட் மற்றும் புகைப்பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல். வெற்றுப்பொதியிடல் முறைமை அங்கீகரிக்கப்படல். கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீற்றர்களுக்கு இடைப்பட்ட தூரத்தில் புகைப்பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல்.புகையிலை நிறுவனத்திடமிருந்து முறையான வரி அறவீட்டுக் கொள்கையை வகுத்துக்கொள்ளல். மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை சட்டத்திற்கு துறை சார்ந்த நிபுனர்களால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை நடைமுறைப்படுத்தல்.
2016ம் ஆண்டு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுசாரம் தொடர்பான கட்டுப்பாட்டுக்கொள்கையை நடைமுறைப்படுத்தல்.
இலங்கையில் கஞ்சாவை சட்டரீதியாக்குவதற்கு இடமளிக்காமல் இருத்தல்.ஹெரோயின் உட்பட ஏனைய அனைத்து போதைப்பொருட்கள் தொடர்பிலும் தற்போது காணப்படும் சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துதல்.
அனைத்து மாவட்டங்களிலும், அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 2020 பொதுத்தேர்தலில் போட்டியிடும் அநேகமான வேட்பாளர்கள் இவ்வேலைத்திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இவ்வேலைத்திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்த வேட்பாளர்கள், பொது மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படுமிடத்து, எதிர்காலத்தில் இது தொடர்பான கொள்கைகளை நாட்டில் செயற்படுத்துவதற்கு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நிகழ்ச்சியொன்றை திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, இந்த சாதகமான கொள்கைகளை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள வேட்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது வாக்காளர்களினதும் பாரிய பொறுப்பாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கேட்டுக்கொள்கின்றது. என்றார்.