அரச ஊழியர்களிற்காக ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் வீடுகளை அமைத்த நிலையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்துவிட்டு காணிவீடு அற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்றுமாறு வடக்குமாகாண ஆளுனர் எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆளுனர் சாள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் இணைத்தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றிய காணி அற்ற 600ற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களிற்கு கடந்த 2009 ஆம்ஆண்டு ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அவற்றில் 131 வீடுகள் யாருமற்ற நிலையில் வெறுமையாக இருப்பதாக வீடமைப்பு அதிகாரசபை அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஓமந்தையை போலவே வவுனியா சாளம்பைக்குளம் மற்றும் சிங்களபிரிவுகளிலும் வீட்டுத்திட்டத்தினை பெற்றபின்னர் பொதுமக்கள் வசிக்காத வீடுகள் பல இருக்கின்றன.
அவையும் அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தான். அவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் வீடுகள் உள்ள பலருக்கு வவுனியா நகரப்பகுதியிலும் வீடுகள் உள்ளது.
அது எனக்கும் தெரியும். எனவே வெறுமையாகவுள்ள வீடுகளில் வசிக்காதவர்களது காணிகளை ரத்துசெய்துவிட்டு வீடற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுனரால் தெரிவிக்கப்பட்டதுடன், சாளம்பைக்குளம் மற்றும் சிங்கள பகுதிகளில் இவ்வாறான நிலமை இருந்தால் பிரதேசசெயலாளர்கள் அதனை ஆராயுமாறு தெரிவித்தார்.