யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும், இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும் இரண்டு நாாட்களுக்கு மேலாக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில்,இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்க வேண்டும்.பல்கலைக்கழக வளாகத்தை விட்டு பொலிஸார் விலக வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை,மாணவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய குழுவொன்று குறித்த இடத்திற்கு விரைந்து மாணவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனானந்தா சென்று பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.பரிசோதனையில் நான்கு மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.