Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கிறது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்!

வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கிறது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்!

2 minutes read

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீது நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் றிஷாத் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த முறை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டமானது நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் அபரிமிதமான விலை உயர்வினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும் நிவாரணமாக அமையவில்லை என்பதோடு, முன்வைக்கப்பட்டுள்ள இவ்வரவுசெலவுத் திட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினை, அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை,அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை,அபரிமிதமான பணவீக்கம் மற்றும் நாட்டில் தேவைப்படும் டொலர் ஒதுக்கீடுகள் இல்லாமை ஆகியவற்றுக்கு எவ்வித தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை.

ஆகவே எதிர்காலத்தில் நாட்டில் பாரிய உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் காணப்படுவதோடு நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்ற அச்சமும் காணப்படுகிறது.

மேலும், இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நிவர்த்திக்கும் வகையில் நாட்டுக்கு தேவைப்படும் அவசியமான உதவிகளை சர்வதேச சமூகத்திடம் இருந்து பெறமுடியாத கையறு நிலையை நோக்கி இந்த அரசாங்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இருபதாவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்திற்குரிய பெரும்பாலான அதிகாரங்களை ஜனாதிபதி தன்வசப்படுத்தியிருந்த போதிலும், கொவிட் – 19 தொற்றினை கட்டுப்படுத்த தவறியமை, கொவிட் – 19 காரணமாக மரணித்த ஜனாசாக்களை உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக்கு எதிராக வேண்டுமென்றே பலவந்தமாக எரித்தமை, நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அச்சமான அசாதரண சூழலால் முழு நாட்டு மக்களும் நிம்மதி இழந்த நிலையில் காணப்படுகின்றமை, இளைஞர்கள், புத்திஜீவிகள், வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபடுகின்றமை என்பன நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

இதேவேளை கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதற்கான நியாயங்களை முன்வைத்து கருத்துக்களை தெரிவித்ததன் அடிப்படையில், இன்று நாடாளுமன்றில் நடைபெறும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கெடுப்பிலும் வரவுசெலவுத் திட்டத்தினை எதிர்த்து வாக்களிப்பதென ஏகமனதாக தீர்மானித்துள்ளது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More