நாட்டில் அமுல்படுத்தபட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் 2 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது.
பின்னர், குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
ஊரடங்கு நேரத்தில் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் எழுத்து மூல அனுமதிப் பத்திரம் ஒன்று இல்லாமல் எவரும், பொதுப் பாதைகள், பொது ரயில் பாதைகள், பொது பூங்காக்கள், பொது விளையாட்டு மைதானங்கள் மற்றும் வேறு எந்தவொரு பொது இடத்திலும் கடற்கரையிலும் நடமாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு ஆதரவாக அலரி மாளிகைக்கு அருகே ஒன்று திரண்ட ஆதரவாளர்கள், அங்கிருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்கள் மீதும், காலி முகத்திடலை அண்மித்த கோட்டா கோ கம அமைதிப் போராட்டக் காரர்கள் மீதும் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடாத்திய பின்னணியில், நாடளாவிய ரீதியில் பரவிய அமைதியின்மையை அடுத்து கடந்த 9 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவால் பொலிஸ் ஊரடங்கு அமுல் செய்யப்பட்டது. அது முதல் அச்சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.