Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை க.பொ.த. சாதாரணதர பரீட்சைகள் திங்களன்று ஆரம்பம் | விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் | பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

க.பொ.த. சாதாரணதர பரீட்சைகள் திங்களன்று ஆரம்பம் | விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் | பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

2 minutes read

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. 

அதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை பரீட்சைகள் ஆரம்பமாகி ஜூன் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய பரீட்சைகள் 5 மாதங்கள் காலம் தாழ்த்தப்பட்டு அடுத்த வாரம் இடம்பெறவுள்ளன. 

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை பரீட்சைகள் ஆரம்பமாகி ஜூன் முதலாம் திகதி நிறைவடையும்.

இம்முறை பாடசாலை ஊடாக 4 இலட்சத்து 7 ஆயிரத்து 129 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். அதே போன்று ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

 அதற்கமைய இம்முறை ஒட்டுமொத்தமாக 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளர்.

இதற்காக நாடளாவிய ரீதியில் 3844 பரீட்சை நிலையங்களும் , 542 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

பாடசாலை ஊடாக பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகள் வழங்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தனியார் பரீட்சாத்திகளில் 80 சதவீதமானோருக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 20 சதவீதமானோருக்கு இவ்வாரத்திற்குள் அனுப்பி வைக்கப்படும்.

மாறாக அனுமதி அட்டை கிடைப்பதற்கு மிகவும் தாமதமாகும் பரீட்சாத்திகள் பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்திற்குள் பிரவேசித்து தமது அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி அதனை தரவிறக்கம் செய்து அச்சு பிரதியைப் பெற்றுக் கொள்ள முடியும். 

பாடசாலை பரீட்சாத்திகளின் அனுமதி அட்டைகளை தாமதிக்காது மாணவர்களுக்கு வழங்குமாறு அதிபர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

பரீட்சைக்கான நேர அட்டவணை அனுமதி அட்டையுடனேயே இணைக்கப்பட்டிருக்கும். அதனை மாத்திரம் பின்பற்றுமாறும் , இணைய தளங்களில் வெளியிடப்படும்  நேர அட்டவணைகளை பின்பற்ற அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் , மேலதிக வகுப்புக்கள் உள்ளிட்டவற்றுக்கு 17 ஆம் திகதி இரவுடன் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

எனினும் பெற்றோர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைக்கு அமைய நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை அவற்றுக்கான அனுமதி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை வினாத்தாள்களை கொண்டு செல்லும் அதிகாரிகள் , மாணவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் பிரதமரின் செயலாளர் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோரிடம் உரிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சீரற்ற காலநிலை குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. 

பரீட்சத்திகளின் நலனைக் கருத்திற் கொண்டு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் என்பன உறுதியளித்துள்ளன. 

அதே போன்று அலுவலக நேர புகையிரதங்களுக்கு மேலதிகமாக காலை வேலைகளில் மேலதிக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More