Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மக்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள்

மக்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள்

2 minutes read

நாட்டு மக்கள் கடந்தகாலங்களில் உள்நாட்டுப்போர், கொரோனா தொற்றுப் பரவல், பொருளாதார நெருக்கடியால் துவண்டுபோயுள்ள நிலையில், விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது திண்டாடுகின்றனர்.

மக்களின் நலன் கருதி இந்த வேளையில் அரசியல்வாதிகளும், பொதுச் சேவைகளில் ஈடுபடுவோரும் குறிப்பாக தனியார் பஸ் சேவைகள் உள்ளிட்டவை மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டிய தேவை மேலும் அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல இன்னல்களையும் போசாக்கு குறைபாடுகளையும் நோய்நொடிகளையும் எதிர்கொண்டுள்ள வேளையில் சிலரின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு அருவருக்கத்தக்க நிலையில் காணப்படுகின்றது.

கடந்த மாதங்களாக ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியால் பலர் எரிபொருளை பெற்றுக்கொள்ள மணிக்கணக்காகவும் நாட்கணக்காகவும் தெருவோரங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் காத்திருந்தனர். இவ்வாறு காத்திருந்தோரில் 10 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தமையும் நாம் செய்திகள் மூலம் அறிந்ததே.

இவ்வாறான நிலையில் தற்போது வரை மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் பல குடும்பங்கள் ஒரு வேளை உணவு உண்பதற்கே பல சிரமங்களை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில் எரிபொருட்களை பெற்று பலர் மோடிகளில் ஈடுபட்டு வருவதுடன் அதிக விலைகளுக்கு பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களை விற்பனை செய்கின்றனர்.

இவ்வாறான மோசடிகளை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் கியூ.ஆர் முறைமையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த முறைமை பல இடங்களில் வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக மக்களே கூறுகின்றனர்.

இந்த கியூ.ஆர். நடைமுறையையடுத்து எரிபொருள் வழங்களில் இருந்த சிக்கல்நிலை தற்போது குறைவடைந்து அனைவரும் எரிபொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இவ்வாறு இருக்க, கியூ.ஆர். முறைமை மூலம் ஒரு வாரத்திற்கு பஸ்ஸொன்றிற்கு 40 லீற்றர் டீசலை மாத்திரம் விநியோகம் செய்வது முற்றிலும் போதாது என தெரிவித்து அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் இன்றையதினம் ஈடுபட்டுள்ளது.

இதனால் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அலுவலகங்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் வேறு அவசர தேவைகளுக்கும் செல்லும் மக்கள் இன்றையதினம் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாக வேண்டிய நிலையேற்பட்டது.

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 38 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக திருத்தி அமைக்கப்பட்டபோதும் தம்மால் நிம்மதியாக பஸ்ஸில் பயணிக்க முடியவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

அத்துடன் எரிபொருள் நெருக்கடியால் கியூ. ஆர். முறைமூலம் எரிபொருட்கள் பகிர்ந்தளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி மக்களின் நலனுக்காக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமை மக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.

இவ்வாறான நிலையில், கோட்டாவில் ஒதுக்கப்பட்ட எரிபொருள் அளவ போதாதென தெரிவித்து மக்களுக்காக பொது சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவது எவ்வகையில் நியாயம் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பாடாவிடில் நாடு இன்னும் அதலபாதாளத்தை நோக்கிச் செல்வதற்கு நாம் ஒவ்வொருவரும் பாத்திரவாளிகளாவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More