முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் சிறப்புரிமைகளை வழங்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி தேர்தல் சட்டங்களுக்கமைய முன்னாள் ஜனாதிபதிக்கும், நிகழ்கால ஜனாதிபதிக்கும் காணப்படும் சிறப்புரிமைகள் தொடர்பில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி பயன்படுத்திய பிரத்தியேக விமானத்திற்கு இலங்கை அரசாங்கமே பணம் செலுத்தியுள்ளது.
அவ்வாறெனில் முன்னாள் ஜனாதிபதி தற்போதும் சிறப்புரிமைகளுடனா வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்க்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டங்களுக்கமைய முன்னாள் ஜனாதிபதிக்கும், நிகழ்கால ஜனாதிபதிக்கும் காணப்படும் சிறப்புரிமைகள் தொடர்பில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி உயிரிழந்ததன் பின்னர் அவரது பாரியாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரரேமதாசவின் பாரியாரான ஹேமா பிரேமதாசவிற்கு அந்த உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளது என்று எண்ணுகின்றேன். எதிர்காலத்தில் இது தொடர்பில் விரிவாக அவதானிக்க முடியும் என்றார்.