ஹட்டன் பகுதிக்கு வருட இறுதி விடுமுறைக்காக பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளனர். இவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகளில், போதைப்பொருட்களுடன் சென்ற பேர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பிராயாணிகள் நுவரெலியா, எல்ல, சிவனொளிபாதமலை, பதுளை உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
அதிகமான சுற்றுலாப் பிராயாணிகள் ரயில்களின் மூலமே செல்கின்றனர். ரயில்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பிராயாணிகள் செல்வதால் ரயில்களில் நெரிசல் நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில், மலையகப் பகுதிகளுக்குப் போதைப்பொருட்களைக் கொண்டு வருவதைத் தடுக்கும் நோக்கில் ஹட்டன் பொலிஸ் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரயில்களில் வருபவர்கள் ஹட்டன் ரயில் நிலையத்திலும், வாகனங்களில் வருபவர்கள் கினிகத்தேனை கலுகல தியகல உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு சோதனை நடவடிக்கையின் போது கடந்த இரு நாட்களில் 8 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்களிடமிருந்து கஞ்சா, மாவா, ஐஸ், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன எனவும், அவர்களைக் ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.