இலங்கையில் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜே.வி.பி. புதிய வியூகம் ஒன்றை வகுத்துக் களமிறங்கியுள்ளது. அதாவது வெளிநாடுகளுக்குச் சென்று பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை அரசியல் கட்சிகளுக்கான மக்கள் ஆதரவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை அறியமுடிகின்றது. அந்தவகையில், தற்போதைய ஆய்வின்படி ஐக்கிய மக்கள் சக்தி முதலாமிடத்தில் உள்ளது. இரண்டாமிடத்தில் ஜே.வி.பியும், மூன்றாமிடத்தில் மொட்டுக் கட்சியும் உள்ளது.
இந்தச் சாதக நிலைமையைச் சரியாகப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கான அதாவது, ஆட்சியைப் பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஜே.வி.பி. இறங்கியுள்ளது.
உள்நாட்டில் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது போக வெளிநாடுகளுக்கும் சென்று பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளது ஜே.வி.பி.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் – தொழில் புரிந்து வரும் இலங்கையர்கள் மத்தியில் இந்தப் பிரசாரப் பணியை ஜே.வி.பி. முடுக்கிவிட்டுள்ளது.
ஆட்சியைப் பிடிக்கும் தருவாயில் வெளிநாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு இந்த மக்களைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம் என்று அறியமுடிகின்றது. இந்நிலையில் முன்கூட்டியே அதற்கான பணியில் இறங்கியுள்ளனர் ஜே.வி.பியினர்.
அவர்கள் பல நாடுகளுக்கு ஒரே நேரத்தில் பிரிந்து சென்று பிரசாரப் பணியைத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில்,ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் திகதி ஐரோப்பிய நாடுகளுக்குப் பறந்தார்.
இத்தாலி, ஜேர்மன், பிரான்ஸ், சுவிட்சலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள இலங்கை மக்களைச் சந்தித்துப் பேசினார்.
இத்தாலியின் மிலானோ நகரில் இடம்பெற்ற கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டதோடு வேறு பல கட்சிகளின் முக்கியஸ்தர்களும் வந்திருந்தனர்.
அதேபோல் கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் சென்று பிரசாரம் செய்தார்.
பிமல் ரத்நாயக்க அயர்லாந்துக்கு விஜயம் செய்தார். விஜித ஹேரத் பஹ்ரைன், டுபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்குச் சென்று பிரசாரம் செய்தார்.
சுனில் ஹந்துன்நெத்தியும் சில நாடுகளுக்குச் செல்கின்றார்.
இவ்வாறு ஆட்சியைப் பிடிப்பதற்காக வித்தியாசமான வியூகம் ஒன்றை வகுத்துக் களமிறங்கியுள்ளது ஜே.வி.பி.