உள்ளூராட்சி சபைத் தேர்தலை குறுக்கு வழியில் ஒத்திவைப்பதற்கு முயன்ற அரசின் முயற்சி தேர்தல்கள் ஆணைக்குழுவால் முறியடிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கவேண்டாம் என்று மாவட்ட செயலர்களுக்கு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலர் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், உடனடியாகவே தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தால், கட்டுப்பணத்தை ஏற்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர்களான மாவட்ட செயலர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக் கோரல் திகதி அறிவிக்கப்பட்டு சகல மாவட்ட செயலகங்களிலும் கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய மறு அறிவித்தல் வரையில் கட்டுப்பணத்தை ஏற்கவேண்டாம் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலரால், அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் நேற்றுக் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த விடயம் உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சின் செயலர் மேற்கொண்ட நடவடிக்கை முறையற்றது என்று ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அமைச்சின் செயலரை, ஆணைக்குழுவுக்கு அழைத்து விளக்கம் கோரவேண்டும் என்பது தொடர்பிலும் சில கருத்துக்கள் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.
உடனடியாகக் கட்டுப்பணத்தை ஏற்க வேண்டும் என்று தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளரின் பணிப்புக்கு அமைவாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தால் அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.