இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுவெடிப்புக்கு ராஜபக்ச குடும்பத்துக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தின் சனல் – 4 இல் நாளை (05) ஒளிபரப்பப்படவுள்ள நேர்காணல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜபக்சக்களை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதற்காக இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த நபர்களுடன் ஒரு சதித்திட்டம் தீட்டுவதற்காக 2018 இல் ஒரு சந்திப்பு இடம்பெற்றது எனவும் அந்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தச் சந்திப்பு இடம்பெற்றுதுடன் சுரேஷ் சாலி என்னிடம் வந்து ராஜபக்சக்களுக்குத் தேவை இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல். அப்போதுதான் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி” – எனக் கூறியதாக ஹன்சீர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
“தாக்குதல் திட்டம் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல. அது இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்று ஆறு மாதங்களுக்குப் பின்னர் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பிடித்தபோது சுரேஷ் சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்” – என்றும் ஆசாத் மௌலானா மேலும் குறிப்பிட்டுள்ளார்.