Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாப்பு விதி மீறல்களை ஒப்புக்கொள்கின்றது தமிழரசின் நிர்வாகம்!

யாப்பு விதி மீறல்களை ஒப்புக்கொள்கின்றது தமிழரசின் நிர்வாகம்!

1 minutes read

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டமையை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ள கட்சியின் நிர்வாகிகளான மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறீதரன், சண்முகம் குகதாசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் முடிந்த கட்சி நிர்வாகிகள் தெரிவுகளை எல்லாம் புறமொதுக்கி வைத்துவிட்டு, அனைத்து விடயங்களையும் ஆரம்பத்தில் இருந்து யாப்பு விதிகளுக்கு அமைய முன்னெடுக்கத் தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கைக் கட்சியின் உறுப்பினரான பரா சந்திரசேகர் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் கட்சியின் தேசிய மாநாட்டுக்கும் நடந்து முடிந்த பொதுக்குழு மற்றும் மத்திய குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கும் தடை விதித்து நீதிமன்றம் கட்டாணை பிறப்பித்திருந்தமை தெரிந்ததே.

இன்று இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிராளிகளான சிறீதரன் எம்.பி. மற்றும் குகதாசன் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும், மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரனும் முன்னிலையாகினர்.

சத்தியலிங்கம் மற்றும் குலநாயகம் ஆகிய எதிராளிகளின் சார்பில் சட்டத்தரணி பிரஷாலினி உதயகுமாரின் அனுசரணையுடன் சட்டத்தரணி ஆன் குலநாயகம் முன்னிலையானார்.

கட்சியின் யாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளன என வழக்காளி குறிப்பிட்ட விடயங்களைத் தமது தரப்பினர் ஏற்றுக்கொள்கின்றனர் என்றும், ஆகையினால் கட்சி விடயங்களை ஆரம்பத்தில் இருந்து கட்சி யாப்புக்கு அமைய முன்னெடுக்கத் தாங்கள் தயார் என்றும் சிறீதரன், குகதாசன், மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை, வழக்காளிகளுக்கு அவர்கள் கோரிக்கைப் படி. நிவாரணம் வழங்க எதிராளிகள் இணங்குகின்றனர் எனவும், யாப்பு விதிகளுக்கு அமைய இனித் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் மீள எடுக்கப்படும் எனவும் அவர்கள் மன்றில் உறுதியளித்துள்ளனர்.

சத்தியலிங்கம் மற்றும் குலநாயகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தமது தரப்பினர் பதில் வாதங்களை எழுத்து மூல சமர்ப்பணங்களாக முன்வைக்கத் தயார் என்ற போதிலும், மற்றைய எதிராளிகளோடு ஒற்றுமைப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பதற்காக அவர்களின் கருத்தியலோடு இணங்கிப் போகத்தயார் என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை, ஏழாவது எதிரியான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமுகமளிக்காத காரணத்தால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More