Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தல் முறை சீர்திருத்தம் ஒத்திவைப்பு! – மனோவிடம் ரணில், விஜயதாஸ உறுதி

தேர்தல் முறை சீர்திருத்தம் ஒத்திவைப்பு! – மனோவிடம் ரணில், விஜயதாஸ உறுதி

1 minutes read
“தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களைத் தொடர்புபடுத்தாது. இவ்விவகாரம் அடுத்து வரும் நாடாளுமன்றத்துக்கு ஒத்திவைக்கப்படும். அது பற்றி புதிய நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி, அரசமைப்பு விவகார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் என்னிடம் உறுதியளித்துள்ளனர்.” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இது பற்றி ஊடகங்களிடம் மனோ எம்.பி. மேலும் கூறியதாவது”-

“தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது என்ற நிலைபாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி அன்று முதல் எப்போதும் கொண்டுள்ளது. இதுவே எமது நிலைபாடாக நாடாளுமன்றத் தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவிலும் தொடர்ச்சியாக இருந்துள்ளது. அன்றைய அமைச்சர், இன்றைய பிரதமர் தினேஷ் குணவர்தன, தலைமையில் கடைசியாக இடம்பெற்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவில், தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் ஏற்பட்டது போன்ற தோற்றப்பாட்டை அரசு காட்ட முயல்கின்றது. இது பச்சைப் பொய்.

பதினாறு உறுப்பினர்களில் சரிபாதி எட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவுக்குழு அறிக்கையை நிராகரித்து, அறிக்கையில் கையெழுத்திட மறுத்து விட்டோம். அங்கே ஏற்பட்ட ஒரேயோரு ஏகமனதான தீர்மானம், சட்டத்தைத் திருத்தி, விகிதாசார முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதாகும். அதையும்கூட அரசு செய்யவில்லை. இந்நிலையில் திடீரென அமைச்சரவையில் தேர்தல் முறை சீர்திருத்தம் வேண்டும் என்று ஒரு நாள், பிறகு இப்போது வேண்டாம் என்று இன்னொரு நாள் தீர்மானிப்பது கேலிக்கூத்து ஆகும்.

இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதியை நான் சந்தித்தபோது இது தொடர்பில் தற்போது முன்னெடுப்புகள் இல்லை என்றார். அதேபோல், சில தினங்களுக்கு முன் நீதி, அரசமைப்பு விவகார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவைச் சந்தித்தபோது அவரும் இதையே எனக்குத் தெரிவித்தார். ஆகவே, இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருகின்றது.

இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுமார் 60 விகிதமானோர் பல மாவட்டங்களில் சிதறி வாழ்கின்றார்கள். எனவே, எமது மக்களைப் பாதிக்கும் எந்தவொரு அடாத்தான, தன்னிச்சையான தேர்தல் முறை மாற்றங்களையும் நாம் ஏற்க மாட்டோம். விகிதாசார முறையை மாற்றாமல் உள்ளக மாற்றங்களைப் பற்றி வேண்டுமானால் நாம் பேசலாம். இது தமிழ் முற்போக்குக்  கூட்டணியின் தொன்று தொட்டு வரும் நிலைபாடு ஆகும். எதிர்வரும் தேர்தல்களில் பெரும்பான்மை கட்சிகளுடன் உடன்பாடுகள் காணும்போது இதுவும் எமது பிரதான நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More