யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
மேற்படி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டமாக 4ஆவது நாளாக நேற்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, மேலும் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டன.
இந்த மனிதப் புதைகுழியில் காணப்படும் எலும்புக்கூடுகள் ஆண், பெண், குழந்தைகள், சிறுவர்கள் எனக் காணப்படுவதனால் அவை குடும்பங்களாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் எலும்புக்கூடுகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே, இதனை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று நீதிவான் கட்டளை பிறப்பிக்கவுள்ளார்.
முன்னதாக, மூன்றுக்கு மேற்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டமையால் இதனை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரி சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான ஆதாரங்கள் – அறிக்கைகளை வெள்ளிக்கிழமை (இன்று) சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, இன்றைய தினம் மனிதப் புதைகுழியாக அறிவிப்பது தொடர்பில் கட்டளை பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.