யாழ்ப்பாணம் மாவட்ட சுயேச்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் எனத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் இன்று ஆரம்பித்தது.
மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களையும் அரசு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிமன்றம், எதிர்மனுதாரரான அர்ச்சுனா இராமநாதனின் சட்டத்தரணிகள் வாதம் செய்வதற்கு வசதியாக வழக்கை ஜூலை இரண்டாம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
அரசு தரப்பில் ஆஜரான மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்த்தன மனுதாரரின் நிலைப்பாட்டை ஆதரித்து வாதங்களை முன்வைத்தார்.
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் இன்னமும் அரச வைத்திய சேவையில் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட அதிகாரியாகத் தொடர்கின்றார். அரச பதவியை விட்டு சட்ட ரீதியாக விலகாத நிலையில் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதோ, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோ சட்ட ரீதியான தவறு என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மனுதாரரான ஓஷாலா ஹேரத் சார்பில் மனுவைச் சமர்ப்பித்து வாதிட்ட சட்டத்தரணி என்.குமரகுருபரன் அஷோக்பரன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகுதி இல்லாத எதிர் மனுதாரர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையில் இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கவும் கோரினார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மாயாதுன்ன கொரயா, மஹேன் கோபல்லாவ ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்த வழக்கை விசாரித்து வருகின்றது.
வருகின்ற ஜூலை 2 ஆம் திகதியோடு பெரும்பாலும் வழக்கு விசாரணை முடிவுற்று தீர்ப்புக்காக அது ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.