செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வன்னியில் 17 சுதேச மருத்துவர்கள் பதிலீடின்றி இடமாற்றம் | ரவிகரன் எம்.பி.

வன்னியில் 17 சுதேச மருத்துவர்கள் பதிலீடின்றி இடமாற்றம் | ரவிகரன் எம்.பி.

2 minutes read

2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தில் 17 சுதேச மருத்துவர்கள் வன்னி தேர்தல் மாவட்டத்தில் இருந்து பதிலீடு இன்றி இடமாற்றப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறாக வளக் குறைபாட்டினால் நலிவடைந்துள்ள மாவட்டங்களில் வருடாந்த இடமாற்றங்களூடாக மேலும் பதிலீடுகள் அற்ற இடமாற்றங்களை ஏற்படுத்த முனையக்கூடதெனவும் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை ஆளணி பரம்பலை முறையாக மாவட்டங்களுக்கு இடையில் மேற்கொள்ள இயலாவிடில் ஒப்பந்த அடிப்படையிலேனும் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சுதேச மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசனால்

18.08.2026இன்று முன்மொழியப்பட்ட, சுதேச வைத்தியத் துறைப் பட்டதாரிகளின் நியமனத் தேவையின் அவசியம் எனும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை வழிமொழிந்து கருத்துதெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!

இன்றைய நாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் அவர்களால் கொண்டுவரப்பட்ட இப்பிரேரணை மிகவும் காலப்பொருத்தமானது. சுதேச வைத்தியத் துறைப் பட்டதாரிகளின் நியமனத் தேவையின் அவசியம் எனும் இப்பிரேரணையை வழிமொழிகிறேன்.

சுதேச மருத்துவ விரிவுபடுத்தலுக்கான வாய்ப்பும் வளமும் இந்தத்தீவிலே காணப்படுகின்ற அளவு, அவற்றுக்கான கொள்கை உருவாக்கமும் நடைமுறைப்படுத்தலும் போதுமான அளவில் இல்லாதிருப்பதையே நிகழ்காலச் சூழல் சுட்டிக்காட்டுகிறது.

ஒருபுறம் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு வினைத்திறனான சேவையை வழங்குவதில் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள சுதேச மருத்துவமனைகள் இடர்படுகின்றன. மறுபுறும் ஆயிரக்கணக்கான சுதேச மருத்துவர்கள் வேலையற்ற பட்டதாரிகளாக சமகாலத்தில் சமூகத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுதேச மருத்துவர்களின் நியமனத்தின் போது வடமாகாணத்தில் குறிப்பாக வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள பெரும்பாலான மருத்துவ வெற்றிடங்கள் நிரப்பப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தில் 17 சுதேச மருத்துவர்கள் வன்னி தேர்தல் மாவட்டத்தில் இருந்து பதிலீடு இன்றி இடமாற்றப்பட்டுள்ளார்கள்.

ஆக, வன்னி மாவட்டத்தில் வழங்கும் இடமாற்றங்களே, இவ்வாறு பதிலீடு இன்றிய இடமாற்றம் ஊடாக இருப்பவர்களை வெளியில் எடுப்பதற்கா என்ற கேள்வி எழுகிறது.

வருடாந்த இடமாற்றங்கள் ஊடாக மேலும் பதிலீடுகள் அற்ற இடமாற்றங்களை இவ்வாறான வளக் குறைபாட்டில் நலிவடைந்துள்ள மாவட்டங்களில் ஏற்படுத்த வேண்டாம் என ஆயுர்வேத திணைக்களத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஆளணி பரம்பலை முறையாக மாவட்டங்களுக்கு இடையில் மேற்கொள்ள இயலாவிடில் ஒப்பந்த அடிப்படையிலேனும் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சுதேச மருத்துவர்களை நியமிக்க வகை செய்யுங்கள்.

மனித உயிருக்கான மதிப்பும் சேவை வழங்கலுக்கான தரமும் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுவது தான் அரசின் கொள்கை நடைமுறையாக இனியாவது இருக்க வேண்டாம்.

மருத்துவர் ஆளணிக்கு மேலாக, சுதேச மருத்துவத்துறையின் வள ஒதுக்கீட்டிலும் சமத்துவ நிலை மாவட்டங்களுக்கு இடையில் பேணப்படல் வேண்டும்.

மருத்துவர் வெற்றிடங்களுக்கு மேலாக, வடகிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் உட்கட்டமைப்பு விருத்திக்கான தேவை, ஏனைய பணிநிலை ஊழியர்களுக்குரிய வெற்றிடங்கள் என்பனவும் சுதேச மருத்துவமனைகளின் வினைத்திறனான சேவை வழங்கலுக்கு சவாலாகிறது.

சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதாரத் தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்களும் பெருமளவில் நிரப்பப்படாமல் உள்ளன. அத்தோடு சுதேச மருத்துவமனைகளில் தாதிய உத்தியோகத்தர்களுக்குரிய பணி வெற்றிடங்கள் வடமாகாணம் முழுதும் பெரும் பற்றாக்குறையாக உள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட சித்த மருத்துவமனை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் தான் சேவையாற்றுகிறது. இவ்வாறு மிகவும் பின்னடைவான ஆளணி வள நிலையோடு சுதேச மருத்துவமனைகள் எவ்வாறு வினைத்திறனான சேவையை வழங்க இயலும்.

சமூக விழிப்பூட்டலை முன்னெடுக்கும் சமூக நல மருத்துவர்களை மருத்துவமனைக்குள் மட்டுப்படுத்தினால் சுதேச மருத்துவ சேவை வழங்கல் எவ்வாறு விரிவடையும்!

பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!

சுதேச மருத்துவ சேவை வழங்கலுக்கான தேவைப்பாடு வெறுமனே ஒரு அமைச்சுடன் மட்டும் மட்டுப்படுத்திவிட முடியாதது. ஒவ்வொரு துறையிலும் சுதேச மருத்துவ சேவை வழங்கலுக்கான தேவைப்பாடு காணப்படுகிறது. தற்போது நடைபெறும் சிறை வன்முறைகளை இழிவளவாக்கும் வகையில், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட வேண்டிவர்களுக்கான சிகிச்சை முறைகளை முன்னெடுத்தல், அரச ஊழியர்களுக்கான உள வள ஆற்றுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பரப்புகளிலும் அரச சேவை வழங்கலுக்கான வெற்றிட நிலை காணப்படுகிறது.

இவ்வாறான சேவை வழங்கலுக்கான ஆளணியினராகவும் சுதேச மருத்துவ சேவை வழங்கலை உள்ளீர்க்க முடியும்.

கல்வி, விளையாட்டு, புனர்வாழ்வு, சிறுவர் நலனோம்பல், மகளிர் வலுவூட்டல், சமூகப் பாதுகாப்பு, சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அமைச்சுகளின் துறை மேம்பாட்டிலும் சுதேச மருத்துவ சேவை வழங்கலுக்கான தேவை காணப்படுகிறது.

எனவே பாரம்பரிய மருத்துவ சேவை வழங்கலுக்கான வாய்ப்பு விரிவாக்கல் தொடர்பாக அரசாங்கம் கூடுதல் கரிசனை கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.