தற்போது புழக்கத்திலுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ், இந்த ஆண்டின் எஞ்சியுள்ள மாதங்களுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு நாங்கள் விசேட முன்னுரிமை அளித்துள்ளோம். இந்த வருடத்துக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடும் இலக்கை எட்டுவோம்.
அதேபோன்று, அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அங்கிருந்து சுமார் 2 வருட காலப்பகுதிக்குள் நாட்டின் 17 மில்லியன் மக்களையும் பழைய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக புதிய டிஜிட்டல் முறைமைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.