அரசாங்க பாடசாலை ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அது தொடர்பாக எதிர்க்கட்சியினரால் முன் வைக்கப்படும் கூற்று உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (19) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படாது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. முற்றிலும் பொய்யான கூற்றே சபையில் முன் வைக்கப்பட்டுள்ளது.
அதில் அவர் அரசாங்க பாடசாலை அதிபர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பது போன்ற தோரணையில் கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அதிபர்கள் தொடர்பான பிரச்சினை யொன்றை அவர் முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறான எந்த தீர்மானமும் கிடையாது. ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படாது என்பதில் எந்த உண்மையும் இல்லை.
ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அந்த வகையில் அவர்களுக்கான சம்பளம் வழமை போன்று உரிய முறையில் உரிய திகதியில் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.