“பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி தமக்கு விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய ரொட்டரி கழகத்தின் மாவட்ட இலக்கம் 3220 ஏற்பாடு செய்த 32 ஆவது ரொட்டரி மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. நாட்டை அராஜகத்துக்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கின்றோம்.
நாட்டின் பொருளாதாரம் விரைவில் வழமைக்குத் திரும்பும் என்று நம்புகின்றேன். இந்த வருட இறுதிக்குள் நாட்டில் ஜனநாயகம் தளராமல் செயற்படும் சமூகம் கட்டியெழுப்பப்படும்.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு மக்கள் துன்பப்படுவதற்கு இடமளிக்கப்படப் போவதில்லை. அதற்கான சகல தீர்மானங்களையும் அரசு மேற்கொள்ளும்.
நான் ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர். ஆனால், ஜனநாயகத்துக்கு முதலில் பொது அமைதி தேவை. அதற்குச் சட்டம், ஒழுங்கைப் பேணுவது அவசியம்.
ஒரு நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது. ஜனநாயகத்துக்கு நிலையான பொருளாதாரம் அவசியம்.
சட்டம், ஒழுங்கு மற்றும் பொருளாதார மீட்சி இல்லாத நாட்டில் அராஜகமே தவிர ஜனநாயகம் இல்லை. நாட்டை அராஜக பாதைக்குக் கொண்டுவந்த செல்ல ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன” – என்றார்.