நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்துக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியம் இருந்தால் வெளியில் வந்து கதைக்குமாறு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது.
முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக சரத் வீரசேகர எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று (25) நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து வவுனியா நீதிமன்றம் முன்பாக அடையாளக் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்தபோதே வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நிலுவையில் உள்ள குருந்தூர்மலை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதியைப் பாதிக்கும் வகையிலான கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அத்துடன் அவர் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தியே இவ்வாறு கதைக்கின்றார். முடிந்தால் அவர் வெளியில் வந்து இவ்வாறு கதைக்க வேண்டும்.
அவரது உரை தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு முகவுரையிடப்பட்டு ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர், நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு அதன் பிரதிகளை அனுப்பி இருக்கின்றோம். இந்தக் கடிதமானது வடக்கு, கிழக்கில் அமைந்துள்ள அனைத்து சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் அனுப்பப்படவுள்ளது.” – என்றார்.